கூட்டணி வெற்றிக்கு பாமக உதவ வேண்டும்-சிதம்பரம்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாமக உதவ வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, சிதம்பரம் சந்தித்துப் பேசினார். பி்ன்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கேள்வி: முதல்வருடன் அரசியல் பேசினீர்களா? என்ன பேசினீர்கள்?
சிதம்பரம்: மாநில முதல்வரை மத்திய நிதியமைச்சர் சந்தித்தால், அரசியல் பேசாமல் இருக்க முடியுமா?. அரசியல் தான் பேசினோம். மத்திய அரசு பட்ஜெட் பற்றி பேசினோம். தமிழகத்தின் அடுத்த பட்ஜெட் வரப் போகிறது. அதைப் பற்றியும் பேசினோம்.
எனது நாடாளுமன்றத் தொகுதியில், ஒரு நிகழ்ச்சிக்காக முதல்வரை அழைத்திருந்தேன். அந்தத் தேதியை உறுதி செய்து கொள்ள வந்தேன்.
கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கும் ஓரு இடம் வேண்டும் என பாமக அடம் பிடிக்கிறதே?
சிதம்பரம்: அதைப் பற்றியெல்லாம் கூட்டணித் தலைவர் கலைஞர் முடிவெடுப்பார். நிலைமைகளை எல்லாம் அவர் விளக்கியிருக்கிறார். முதல் சுற்றில் பா.ம.கவிற்கு தரப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம் தரப்பட்டுள்ளது.
மூன்றாவது சுற்றில் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அடுத்த சுற்று பா.ம.கவுக்கு என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்டு, கூட்டணி பலப்பட உதவி செய்ய வேண்டுமென்று நானும், பா.ம.க தலைமையை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.