For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்சார தட்டுப்பாடுக்கு ஜெ. தான் காரணம்-ஆற்காடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆனால் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இப்போது அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கவும், 12ம் வகுப்பு, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து பகுதிகளிலும் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அனைத்து தொழில் அதிபர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளும், ஞாயிறு விடுமுறை விட்டால் ஞாயிற்றுக்கிழமை 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகிறது.

எனவே அனைத்து தொழிற்சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை தங்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்காமல் தமிழகத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலமும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்படாது, அனைவருக்கும் மின்சாரம் வழங்க முடியும்,

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும் நிறுவனங்களுக்கு வாட் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை அனைத்து தொழிலதிபர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்று இது ஒரு நல்ல ஏற்பாடு, இதை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் இம்முறை அமல்படுத்தப்பட்டு தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் மின் தடையில்லாமல் மின்சார வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

5வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட கருணாநிதி வட சென்னையில் 600 மெகா வாட் மின் நிலையம், தூத்துக்குடியில் 500 மெகாவாட் மின் நிலையம்,

மேட்டூரில் 500 மெகாவாட் மின் நிலையம், தூத்துக்குடி உடன்குடியில் 1,600 மெகாவட் மின் நிலையம், ஜெயங்கொண்டத்தில் 1,000 மெகாவாட் மின் நிலையம் ஆகியவற்றை அமைக்க ஒப்பந்தங்கள் செய்தார்.

இந்தப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் 3 ஆண்டுகளில் மொத்தம் 4,200 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ளது.

மேலும் கருணாநிதி மீண்டும் முதல்வரானதில் இருந்து 17 மாத காலத்தில் சுமார் 20 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து, அதில் 13 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கிவிட்டதால் நாள் தோறும் சுமார் 700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் இது போன்ற புதிய தொழிற்சாலைகள் எதுவும் தமிழகத்து பக்கம் எட்டியே பார்க்காத காரணத்தால் மின்சார பயன்பாடு அதிகரிக்கவில்லை.

மேலும் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வட சென்னை அனல் மின்நிலையம் கூடுதலாக 630 மெகா வாட் மின் உற்பத்தி செய்ததால் அதிமுக ஆட்சியில் மின்சார பற்றாக்குறை ஏற்படவில்லை.

ஆனால் கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இப்போது அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் 2005ம் ஆண்டு மின்சார சட்டத்தின் அடிப்படையில் மின் வினியோகம், மின் உற்பத்தி பிரிவுகளை தனியாக பிரிக்க வேண்டும் (தனியார்மயமாக்க) என்ற சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் அந்த சட்டத்திலிருந்து இன்று வரை விதி விலக்குப் பெற்று தமிழக மின்சார வாரியம் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் சுமார் 25,000 மெகாவாட் மின்சாரம் வணிகரீதியில் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டு அந்நிறுவனங்கள் 3 ஆண்டு காலத்திற்குள் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்தால், அதில் உபரி மின்சாரத்தை கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் விற்பனை செய்வதற்கு, தெற்கு மண்டலத்தின் தலைநகராக உள்ள பெங்களூரில் அமைந்தள்ள மின் கட்டமைப்பில் இணைக்க டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் என்ற ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராக, மின்சார வாரியத் தலைவர் தான் செயல்படுவார். எக்காரணத்தைக் கொண்டும் இந்த டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

இந்த டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் உருவாவதற்கு முன் அனைத்துத் தொழிற்சங்க தலைவர்களையும் மற்றும் பிரதிநிதிகளையும் அழைத்து பேசி (அதிமுகவை சேர்ந்த அண்ணா தொழிற்சங்கம் உட்பட) தொழிலாளர்கள் தங்கள் விருப்பம் போல் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும், அதாவது மின் விநியோகம், மின் உற்பத்தி மற்றும் மின்சார டிரான்ஸ்மிஷன் ஆகிய துறைகளில் ஏதாவது ஒரு பிரிவில் பணியாற்ற அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதில் எந்த சந்தேகமும் வரத் தேவையில்லை. அப்படி ஏதாவது சந்தேகம் ஏற்படுமேயானால் மின்சார வாரியத்தில் உள்ள அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற் சங்கத் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

திமுக ஆட்சியில் மின்சார வாரியம் திறந்த புத்தகமாகத் தான் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் எவ்வித சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அதுபற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ள மின்சார வாரிய உயர் அதிகாரிகளான உறுப்பினர்-மின் வினியோகம், உறுப்பினர்-மின் உற்பத்தி மற்றும் உறுப்பினர்-கணக்கு ஆகிய மூவரில் யாரிடமும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் ஆற்காடு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X