சிரஞ்சீவி சின்னம்- திமுக ஆட்சேபம்!
சென்னை: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது புதிய கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தைத் தேர்வு செய்திருக்கிறார். இதனால் திமுக அதிருப்தி அடைந்துள்ளது.
தமிழகத்தில் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பது டீக்கடை விவாதங்களின், நிரந்தரமான கேள்வியாக உள்ளது. அதேபோல சிரஞ்சீவி எப்போது அரசியலுக்கு வருவார் என்று ஆந்திராவிலும் அடிக்கடி கேட்கப்பட்டு வருகிறது.
ரஜினி அரசியல் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால், நான் வருகிறேன், விரைவில் கட்சி தொடங்குவேன் என்று சிரஞ்சீவி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அவரது கட்சி ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. கட்சிக்கான பெயர், சின்னத்தை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை சிரஞ்சீவி தரப்பு அணுகியுள்ளது. கட்சிக்கான சின்னமாக உதயசூரியனை தேர்வு செய்துள்ளாராம் சிரஞ்சீவி.
ஆனால் அந்த சின்னம் தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருப்பதால், திமுகவின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாம்.
சிரஞ்சீவி கட்சி உதயசூரியன் சின்னத்தை கட்சியின் சின்னமாக தேர்வு செய்துள்ளதற்கு திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம். விரைவில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக பதில் அனுப்பவுள்ளதாம்.
இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், திமுக ஆரம்பம் தொட்டு உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்தி வருகிறது. தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் திமுகவுக்கு கிளைகள் உள்ளன. சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் எங்களது சின்னத்தை இன்னொருவர் பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும். நிச்சயமாக இதை ஆட்சேபித்து தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்புவோம் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications