உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
வாரணாசி: நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த 90வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக வாரணாசி வந்த மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கும், பட்ஜெட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறுவது தவறு என்றார்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், நவீன உலகின் சவால்களை சந்தித்து வெற்றி பெறும் திறமையுடன் இளைஞர்களுக்கு கல்வி அறிவு புகட்டி அனுப்பும் சவால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்வித்துறைக்கும் உள்ளது.
உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது அறிவின் உலகம். மாற்றத்திலும், வளர்ச்சியிலும் அறிவின் பங்கு மிக முக்கியமானது. எனவே நமது இளைஞர்களை அறிவுத்திறன் உடையவர்களாக உருவாக்க வேண்டியது அவசியம்.
சர்வதேச சமுதாயத்தில் நமது நாடு முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், வலுவான பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு, வலுவான அறிவியல், தொழில்நுட்பக் களம் ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உயர் கல்வி முறையை பலப்படுத்த வேண்டியது அவசியம்.
கடந்த நான்கு ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி 9 சதவீத விகிதத்தில் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு புதிய வாய்ப்புகள், சவால்கள் நமக்கு ஏற்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் இத்தகையை வளர்ச்சியை நமது நாடு கண்டதில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது உயர் கல்வி முறையின் வளர்ச்சிக்கு பசுமைப் புரட்சி, விண்வெளிப் புரட்சி, ஐடி புரட்சி ஆகியவை முக்கிய காரணங்களாகும். இந்த சாதனைகளோடு நின்று விடாமல், வளர்ந்த உலகம் நமக்கு விடுக்கும் சவால்களையும் ஏற்றுக் கொண்டு நாம் இன்னும் உயரத்திற்குப் போக வேண்டியது உள்ளது என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications