குஜராத் கலவர வடு ஆறி விட்டது - மோடி
டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவர வடு ஆறி விட்டது. முஸ்லீம்கள் இப்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் உள்ளனர் என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
இந்தியா டுடே இதழின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மோடி, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
குஜராத் கலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மோடி பதிலளிக்கையில், எனது மாநில மக்கள், குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட வடுக்களிலிருந்து வெளியே வந்து விட்டனர். அந்தக் காயம் ஆறி விட்டது. இப்போது அமைதியாக வாழ்கின்றனர். வளர்ச்சியின் பலன்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
மத ஒற்றுமையை உருவாக்க வளர்ச்சித் திட்டங்களை நான் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட பரூக் அப்துல்லா, இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் ஏற்பட்ட காயங்களிலிருந்து வெளியே வர முடியும், மறக்க முடியும்.
நடந்ததை மறக்க இப்போது நேரம் வந்துள்ளது. அனைவரும் அதிலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் காங்கிரஸ் முதல்வரான திக்விஜய் சிங், மோடியிடம், குஜராத் மாநில தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட பாஜக நிறுத்தாதது ஏன் என்று கேட்டார். அதற்கு மோடி, கடந்த தேர்தல்களை விட இந்த முறை குறைவான முஸ்லீம் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியது ஏன் என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்து மோடி பேசுகையில், தாலுகா, மாவட்ட அளவில் ஏராளமான முஸ்லீம் வேட்பாளர்ளை உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நிறுத்தியது. அவர்களில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications