அதிமுகவிலிருந்து வக்கீல் ஜோதி திடீர் விலகல்
அதிமுக வழக்கறிஞராக, ஜெயலலிதாவின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தவர் ஜோதி. ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.
அவர் உள்பட காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்குத்தான் தற்போது தேர்தல் நடக்கிறது. ஆனால் ஜோதிக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை. மாறாக பாலகங்காவுக்கு சீட் கொடுத்தார்.
இதனால் அப்செட் ஆன ஜோதி தற்போது அதிமுகவிலிருந்து விலகி விட்டார். தனது ராஜினாமா கடிதத்ைத ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், தான் இதுவரை பார்த்துக் கொண்டிருந்த அதிமுக மற்றும் ஜெயலலிதா தொடர்பான வழக்குகளின் கோப்புகளையும் அவர் அனுப்பி வைத்து விட்டார்.
ஜோதியின் ராஜினாமாவை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிகிறது. புதிய வக்கீலையும் அவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜோதியின் ராஜினாமா ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கை வட்டாரத்தில் இல்லை. இதனால்தான் அவருக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், காவிரி நடுவர் ஆணைய வழக்குகள் தொடர்பாக டெல்லிக்கு அவர் பயணம் மேற்கொண்டதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சிபிசிஐடி தொடர்ந்த வழக்கால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டதாக ஜெயலலிதா கருதியதாலும் ஜோதியை புறக்கணிக்க ஆரம்பித்தாராம்.
இப்படி ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டதால் அப்செட் ஆகித்தான் ஜோதி அதிமுகவிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.