திபெத்தில் சீனா வெறியாட்டம்-120 பேர் கொலை
பெய்ஜி்ங்: திபெத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களை சீன ராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தனி நாடான திபெத் சீனாவி்ன் ஆக்கிரமிப்பில் உள்ளது. திபெத் விடுதலை கோரி எழுந்த போராட்டங்களை சீனா இரும்புக் கரம் கொண்டு ஒடு்க்கி வருகிறது.
இதையடுத்து சுதந்திரக் கோரிக்கையை விட்டுவிட்டு சுயாட்சி கோரிக்கையை முன் வைத்து போராடி வருகின்றனர் திபெத் மக்கள். இதையும் சீனா ஏற்கத் தயாராக இல்லை.
சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் திபெத்தில் சுயாட்சி கோரிக்கைக் குரல்கள் ஓங்க ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக மக்களும் புத்த பிட்சுக்களும் ஆர்ப்பாட்டங்கள், அமைதிப் பேரணிகள் நடத்தி வருகின்றன.
இதையடுத்து அவர்களை ஒடுக்க ஆரம்பித்துள்ளது சீனா. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திபெத்தில் பிட்சுக்கள், பொது மக்கள் என 120க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தால் சுட்டு்க் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் இந்தச் செயலுக்கு உலகெங்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல நாடுகள் ஒலிம்பிக் போட்டியையே புறக்கணிக்கலாமா என்ற ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
தனிப்பட்ட முறையில் உலகின் பல முன்னணி வீரர்களும் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா இந்தக் கொலைகளை கலாச்சார படுகொலைகள் என விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ஆக்கிரமிக்கப்பட்ட எங்கள் பூமிக்கு நாங்கள் விடுதலை கேட்கவில்லை.
தனி நாடு கோரிக்கையை எல்லாம் கைவிட்டுவிட்டோம். மக்களுக்கு சுயாட்சி தான் கோருகிறோம். அதை வழங்க மறுப்பதோடு மக்களையும் சீனா கொன்று குவிப்பது வரலாற்றுத் தவறு என்றார்.
இந் நிலையில் திபெத் மக்களுக்கு ஆதரவாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.
திபெத்தை 1951ம் ஆண்டு சீனா ஆக்கிரமித்தது. சீனாவை எதிர்த்து தலைமறைவு போராட்டம் நடத்திய தலாய் லாமா உள்ளிட்ட ஆயிரக்கணக்கனோர் 1959ம் ஆண்டில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.