தொகுதி சீரமைப்பு: நரேஷ் குப்தா ஆலோசனை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகள் குறித்து நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் இனிமேல் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து புதிய தொகுதிகளின் அடிப்படையில் புதிய வாக்குச் சாவடிகளை அமைப்பது, வாக்காளர் பட்டியலை திருத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
நெல்லையில் மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். இதில், நெல்லை கலெக்டர் பிரகாஷ், குமரி கலெக்டர் ஜோதி நிர்மலா, இணை தேர்தல் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் மோகன், நெல்லை ஆர்டிஓ ராஜேந்திரன், தேர்தல் தாசில்தார் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சேரன்மகாதேவி, சாத்தான்குளம், திருவட்டாறு ஆகிய சட்டசபை தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு புதிதாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை மாற்றி அமைப்பது, புதிய வாக்கு சாவடிகளை உருவாக்குவது, போன்ற ஆலோசனைகளை அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மேற்கொண்டார்.