ரஜினி நிலம் வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை-அரசு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் 8.93 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
இந்த நிலத்தை ரூ.21 லட்சத்திற்கு ரஜினி வாங்கியுள்ளார். இதற்கான பத்திர பதிவு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நடந்தது.
இந்த இடம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அரசின் வழிகாட்டு மதிப்பை விட குறைத்து பத்திரப்பதிவு செய்ததாகவும் இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
பத்திரப் பதிவு நடந்த ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆடிட்டர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் பத்திரம் எழுதியவர், நில புரோக்கர், கிராம பஞ்சாயத்து தலைவர், பதிவுத் துறை ஊழியர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
ரஜினி வாங்கிய நிலத்தையும் பார்வையிட்டனர்.
அவர் வாங்கிய நிலத்தின் மதிப்பு ஒரு சென்ட் (அரசு வழிகாட்டு மதிப்பு) ரூ.3,000 ஆகும்.
ஆனால் அதை விட கூடுதலாக ஒரு சென்ட் ரூ.3,157 வீதம் ரஜினிகாந்த் பத்திரப் பதிவு செய்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் நில மதிப்பை ரஜினி குறைத்துக் காட்டினார் என்றக் குற்றசாட்டு தவறானது என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகைப்பேர் என்ற கிராமத்தில் 8.93 ஏக்கர் நிலத்தை ரஜினிகாந்த் ரூ.21 லட்சத்துக்கு வாங்கி ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்பதிவினை சார்பதிவாளர் பொறுப்பிலிருந்த உதவியாளர் கோ.வசந்தகுமார் செய்திருக்கிறார்.
04.01.07ம் தேதி வியாழக்கிழமை பகல் 1 மணி அளவில் ரஜினிகாந்த், சொத்து விற்பனை செய்த நபர் ஆகியோர் ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆஜராகி கையொப்பம் செய்து பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் வாங்கிய சொத்தின் வழிகாட்டு மதிப்பு அந்தத் தேதியில் ரூ. 20 லட்சத்து 3 ஆயிரத்து 963.50 ஆகும்.
ஆனால் இம்மதிப்பைக் காட்டிலும் ரூ. 96 ஆயிரத்து 36.50 மதிப்பு கூடுதலாக ரூ. 21 லட்சத்துக்கு நிலம் பதிவு செய்யப்பட்டு அதற்குரிய முத்திரைத் தீர்வை 16 ஆயித்து 800மும் பதிவுக் கட்டணம் ரூ. 21 ஆயிரமும் செலுத்தியுள்ளார்.
இதனால் இந்தப் பதிவினால் அரசுக்கு எந்தவித வருவாய் இழப்பும் ஏற்படவில்லை.
எனவே ரஜினிகாந்த் வாங்கிய சொத்து தொடர்பான பத்திரப் பதிவில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் சுரேஷ் ராஜன்.












Click it and Unblock the Notifications