ரஜினி .. விறுவிறுப்பில் பொள்ளாச்சி!
குசேலன் படப்பிடிப்புக்காக ரஜினி பொள்ளாச்சிக்கு வருகை தரவுள்ளதால், பொள்ளாச்சி மக்கள் ரஜினியை தரிசிக்க ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.ஒரு இடத்துக்கு ரஜினி வருகிறார் என்றால் அடுத்த நாளே அந்த இடம் விஐபி அந்தஸ்து பெற்று விடுகிறது. அதனால்தான் ரஜினியின் அனைத்து விசிட்டுகளும் படு ரகசியமாக வைக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகில் அதிகம் அறியப்படமாலிருந்த புவனகிரி எனும் சின்ன கிராமம் இன்று முக்கிய தலமாக மாறிவிட்டது, ரஜினியின் இரு விசிட்டுகளுக்குப் பிறகுதான்.
இப்போது சூப்பர்ஸ்டாரின் அடுத்த பயணம் பொள்ளாச்சியை நோக்கி. அங்கே அவர் கோயில் எதையும் எழுப்பப் போவதில்லை. தனது அடுத்த படமான குசேலனின் முக்கியக் காட்சிகளை படமாக்க வருகிறார்.
ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் ரஜினியும் அவரது குழுவிரும் இங்குதான் தங்கப் போகிறார்கள். இதற்காக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம், ஆனைமலை பகுதிகளில் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்துள்ளார் வாசு.
ரஜினி தங்க ஒரு தனி வீட்டையும் ஏற்பாடு செய்துள்ளாராம். அந்த வீட்டுக்கு இப்போது ஏக மவுசாகி விட்டது. அந்த வீட்டைப் பார்க்க இப்போதே கூட்டம் கூட ஆரம்பித்து விட்டதாம்.
இதுதானுங்க, ரஜினி தங்கப் போற வீடு என்று கூறி, பார்வையாளர்களை ஒழுங்குபடுத்தி பார்க்க விடுகிறார்களாம் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள்.
அப்ப, பொள்ளாச்சியில், இன்னும் 15 நாட்களுக்கு ரஜினி ஆட்சிதான்!