கோவிலில் ஆடு வெட்டிய டோணிக்கு சிக்கல்
லக்னோ: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கோவிலில் ஆடு வெட்டி சாமி கும்பிட்டதால் இந்திய ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு எதிராக பிராணிகள் நல அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
டோணி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு ராஞ்சியில் அவர் தனது வீட்டில் கட்டி வரும் நீச்சல் குளத்தை எதிர்த்து குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் கோவிலில் சாமி கும்பிடச் சென்றபோது ஆடு வெட்டி பலி கொடுத்தது தொடர்பாக டோணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை முத்தரப்புத் தொடரில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டியதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் திரும்பியதும், தலைநகர் ராஞ்சி அருகே உள்ள சின்மஸ்திகா கோவிலுக்குச் சென்றார் டோணி.
அங்கு ஆடு வெட்டிப் பலி கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி சாமி கும்பிட்டார். இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து பெடா எனப்படும் பிராணிகள் நல அமைப்பு டோணிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அமைப்பின் தலைவர் அனுராதா சாவ்னி எழுதியுள்ள அக்கடிதத்தில், விலங்குகளைப் பலியிடுவதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நாம் கொள்ள முடியாது.
நீங்கள் செய்திருப்பது மிகவும் கொடுமையான செயல். இதைப் பார்த்து ஏராளமான இளைஞர்களுக்கும் இதுபோல செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணம் ஏற்பட வழி வகுத்து விட்டீர்கள்.
உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், ஜாதிப் பாகுபாடு போன்றவையும் ஒரு காலத்தில் இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இருந்தன. ஆனால் இன்று அவையெல்லாம் தடை செய்யப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார் அனுராதா.
இதேபோல இந்திய பிராணிகள் நல வாரியமும் டோணி ஆடு பலி கொடுத்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
வாரியத்தின் தலைவர் ஆர்.எம்.கர்ப் இதுகுறித்து டோணிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைவரும் அறியும் விதமாக ஆடு பலி கொடுத்த நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இனிமேலாவது கவனமுடன் நடந்து கொள்ளுமாறு அதில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியர்களை பழி வாங்கி விட்டு வந்த டோணியைப் பாராட்டியவர்கள், இப்போது ஆடு பலி கொடுத்ததற்காக அவரை வாட்ட ஆரம்பித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications