நடிகர் ஷோபன்பாபு மரணம்!

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனது வீட்டில் இன்று காலை அவர் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவரது மூக்கிலிருந்து திடீரென ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி சரிந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.
உப்பு ஷோபன சலபதி ராவ் எனும் இயற்பெயர் கொண்ட ஷோபன் பாபு 1937-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை விஜயவாடாவில் முடித்தவர் பின்னர் சட்டப் படிப்புக்காக சென்னைக்கு வந்தார். ஆனால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்னர் 1958-ல் கண்டகுமாரி என்பவரை மணந்தார். அவருக்கு கருணா சேஷு என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகில் பிரபல நடிகராகத் திகழ்ந்த ஷோபன் பாபு, 2007-ம் ஆண்டு வரை நடித்துக்கொண்டே இருந்தார். கடந்த ஆண்டுதான் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிரபல நடிகராகத் திகழ்ந்தாலும் தனது குடும்பத்தினர் யாரையும் திரைத்துறைப் பக்கமே எட்டிப்பார்க்க அவர் அனுமதிக்கவில்லை. தனது மனைவி, மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் என சென்னையில் தனது இறுதி நாட்களை சந்தோஷமாகக் கழித்தார்.
திரைவாழ்க்கை:
என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்களுடன் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த ஷோபன் பாபு முதன் முறையாக நாயகனாக நடித்த படம் வீர அபிமன்யு. 1965-ல் வெளியானது. அவரது மனுசுலு மாரளி என்ற படம் அன்றைக்கு 25 வாரங்கள் ஓடியது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.
தெலுங்கு நடிகர்களில் மிகவும் ஸ்டைலான நடிகர் என பெயர் பெற்றவர் ஷோபன்பாபு. தெலுங்குப் படம் ஒன்றுக்காக வெளிநாடு போன முதல் நடிகரும் இவர்தான்.
சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் விருதை பல முறை வாங்கியிருக்கிறார் ஷோபன் பாபு. நான்கு முறை பிலிம்பேர் விருதுகள், ஐந்து முறை நந்தி விருது மற்றும் 6 முறை ஆந்திர சினிமா ரசிகர்கள் சங்க விருதுகளை வாங்கியுள்ளார். சென்னை சினிமா ரசிகர்கள் சங்கத்தின் சிறந்த நடிகர் விருதினை 9 முறை வாங்கி சாதனை படைத்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் விருது 1970-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. படம்: பங்காரு பஞ்சாரம்.
30 ஆண்டுகளுக்குமேல் நீடித்த திரை வாழ்க்கையில் 20 ஆண்டுகாலம் பெண்களின் கவர்ச்சி நாயகனாகத் திகழ்ந்தவர் ஷோபன் பாபு. சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே விட்டுவிடாமல், ரியல் எஸ்டேட் தொழிலில் பாதுகாப்பாக முதலீடு செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications