தமிழகத்தில் புதிய வரிகள் இல்லா பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் அன்பழகன் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதி்ல் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டில் கல்வி, விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விவரம்:
விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்து கொள்ள நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைப் பாதுகாத்திட குளிர்பதன வசதி செய்து தரப்படும்.
ரூ.5.5 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கென சுய உதவிக் குழுக்கள் துவக்கப்படும். இதற்கு ரூ. 10 கோடி சுழல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.*
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். பால் உற்பத்தியை பெருக்க கறவை மாடுகள் வாங்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.22 கோடி வழங்கப்படும்.
பனை தொழிலாளர் நல வாரியத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது.
கைவினைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்து தரப்படும்.
மேலும் 25,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள்:
தமிழகத்தில் வரும் 2008-09ம் ஆண்டில் 4 லட்சம் மகளிரை உறுப்பினர்களாக கொண்ட மேலும் 25,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்படும்.
ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ. 15,000லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்படும். சுமார் 65,000 ஏழை பெண்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்காக ரூ. 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கி திமுக அரசு தான் பெண்ணுரிமையை நிலைநாட்டியது.
இந்த வகையில், தமிழ்நாட்டில் மகளிர் நலன் பேணிடும் வண்ணம் செயல்பட்டு வரும் மகளிர் ஆணையத்திற்கு இந்த அரசு சட்டப்பூர்வமான அதிகாரம் அளிக்கும். இதற்கான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications