ரகுவரன் உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னை: சென்னையில் நேற்று மரணமடைந்த நடிகர் ரகுவரனின் உடல் மாலையில் தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர் திரண்டு சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
நடிகர் ரகுவரன் நேற்று காலை தனது சென்னை தி.நகர் வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் அனைவரும் ரகுவரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள், பிரமுகர்கள் ரகுவரன் வீட்டுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலையில் தி.நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு ரகுவரன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. திரையுலகினர் பெரும் திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நடந்த இறுதிச் சடங்கில், ரகுவரனின் பத்து வயது மகன் சாய், தனது தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார்.