அணிக்கு இளம் வீரர்கள்தான் தேவை: டோணி
டெல்லி: இந்திய அணிக்கு இளம் வீரர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோணி அதிரடியாக கூறியுள்ளார்.
கங்குலியை ஒரு நாள் அணியில் சேர்க்க விடாமல் தடுத்தார் டோணி என்று சமீபத்திய ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் இதை பொருட்படுத்தவில்லை டோணி. கங்குலி நீக்கத்தால் அணிக்கு எந்த கஷ்டமும் இல்லை என்றார் அவர். அதேபோல ஆஸ்திரேலியாவை முத்தரப்புத் தொடரில் டோணி தலைமையிலான இளம் படை வீழ்த்தியபோது, அத்தனை விமர்சனங்களும் பறந்து போய் விட்டன.
இந்த நிலையில், இளம் வீரர்கள்தான் இந்திய அணிக்கு இனிமேல் தேவை என்று தடாலடியாக கூறியுள்ளார் டோணி. இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், 'எனது அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பது இப்போது புரிந்துவிட்டது. சீனியர்களுக்குப் பதில் இளம் வீரர்கள்தான் வேண்டும். அதை அணி தேர்வாளர்களிடம் கூறிவிட்டேன். எனது அணியில் உள்ள இப்போதுள்ள வீரர்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டியது அவசியம். அதற்கு, வீரர்கள் தேர்வு விஷயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எனது வீரர்களைப் பாருங்கள். இக்கட்டான சூழ்நிலையை இளம் வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளையெல்லாம் சிதறடித்து விட்டார்கள். அந்த கேள்விகளை கேட்டவர்கள் இப்போது கேட்கட்டுமே? எங்கே போனார்கள் அவர்கள்?
எனது எதிர்தரப்புக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இப்போது என்னை பாராட்டுபவர்கள் ஒருவேளை நாங்கள் தோற்றிருந்தால் மாற்றி பேசுவதற்கு வாய்ப்புள்ளது. எனது முடிவை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல நினைக்கிறேன். இல்லாவிட்டால் நான் சொல்ல நினைப்பதை அவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை.
ஆனால் வெற்றி நிலையானதல்ல. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டுமேன்றால் தொடர்ந்து திறமையைக் காட்டவேண்டும். தகுதி இருந்தால் அணியில் இடம். இல்லாவிட்டால் இல்லை. இதை உணர்ந்து இன்றைய அணி வீரர்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications