தொழிலதிபரிடம் துப்பாக்கியைக் காட்டி ரூ.17 லட்சம் பறிப்பு
சென்னை: சென்னையில் தொழிலதிபரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ. 17 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுந்தர்ராமன் (45) போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில்,
நான் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கன்சல்டன்சி தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறேன். மேலும் பல நிறுவனங்களுக்கு பைனான்சிய கன்சல்டன்டாகவும் உள்ளேன்.
சூளைமேட்டை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சரியாக செயல்படாததால், வங்கியில் உள்ள அந் நிறுவனத்தின் பணத்தை எடுக்க, வங்கி அனுமதி மறுத்து வருவதாகவும், நீங்கள் இதனை சரி செய்ய உதவினால் 10 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து நான் வங்கி அதிகாரிகளுடன் பேசி நிலைமையை சரி செய்தேன். வங்கியில் இருந்து பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
கம்பெனி நிர்வாகத்தை நான் நிர்வகிப்பதாக வங்கியிடம் எழுதிக் கொடுத்திருந்தேன். இதன் பின்னர்தான் பணம் கொடுக்க வங்கி அதிகாரிகள் சம்மதித்தனர்.
இந்நிலையில் எனக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தினர் ரூ.6 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ளனர். இது குறித்து நான் கணக்கு கேட்டேன்.
இதையடுத்து அந்த நிறுவன பங்குதாரர்கள் என்னை மிரட்டினர். இந் நிலையில் வட பழனியில் உள்ள எனது வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.17 லட்சத்தை பறித்துச் சென்று விட்டது.
இதனால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு பாதுகாப்பு அளித்து பணத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளதால் இது குறித்து விசாரிக்க தி.நகர் துணை கமிஷனர் லட்சுமிக்கு கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications