மீலாது நபி: கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: மீலாது நபியையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, அன்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட அனைவரும் இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி:
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தனது வாழ்க்கையையே வழிகாட்டும் நெறியாகக் கொண்டு வாழ்ந்த நபிகள், கடைப்பிடித்த மனித நேயத்தைப் பின்பற்றி, அவர் போல ஏழை, எளியோர், விதவை மகளிர், ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திட உழைத்திடுவோம்.
பொய்மை களைவோம், வாய்மையுடனும், நேர்மையுடனும் வாக்குறுதிகள் காப்போம் என இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், பிளவுபட்டு நிற்கும் இந்த பூமியில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், அண்ணல் நபிகளின் போதனைள் பெரிதும் பயன்படும்.
தரணி தழைக்க வந்த தன்னிகரற்ற நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில், தமிழகத்து இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு எனது மீலாது நபி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மீலாது நபி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.