கொல்லம் ரயில் தடம் புரண்ட ரயில் பாதை சீரானது
வள்ளியூர்: நெல்லை-நாகர்கோவில் ரயில் பாதையில் கொல்லம் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் 30 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றி ரயில்வே ஊழியர்கள் அதை சீரமைத்தனர். இதையடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது.
மதுரை-கொல்லம் ரயில் பணகுடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை 3.55க்கு தடம் புரண்டது. இதில் 6 ரயில் பெட்டிகள் தண்டவளத்தை விட்டு கீழே இறங்கின. ஒரு பெட்டி விபத்தில் சிக்கி சின்னபின்னமானது. மற்றொரு பெட்டி கவிழ்ந்தது. சிலிப்பர் கட்டைகள் ரயில் பாதை தெரியாத அளவுக்கு தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் 200ககும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு பகலாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்தது. தொடர்ந்து பெய்த மழையால் பணிகள் தாமதமானது.
30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை 9.30 மணிக்கு ரயில் பாதை போக்குவரத்திற்கு தயாரானது. இதை தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயில் பாதையை சீரமைப்பதற்காக உபகரணங்களை கொண்டு வந்த சிறப்பு ரயில் அந்த பாதையில் இயங்கி சோதனை நடத்தி பார்க்கப்பட்டது. இதன் பின்னர் அந்த பகுதியில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ரயில் பாதையில் குறிப்பிட்ட அளவு வேகத்தில் ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் காலை 10.55 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் முதலில் இயக்கப்பட்டது. இந்த ரயில் 12.30 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது. பின்னர் நெல்லையில் இருந்து 12.55க்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து மற்ற ரயில்கள் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications