சிவாஜி ஜெயந்தி: பீதியில் வட இந்தியர்கள்!
மும்பை: மராத்திய மன்னன் வீர சிவாஜியின் பிறந்தநாளை நாளை அதி விமரிசையாகக் கொண்டாடுவதற்கு ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமயத்தின்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதி வட இந்தியர்களிடையே நிலவுகிறது.
எப்போதும் இல்லாத அளவுக்கு வெகு விமரிசையாக சிவாஜி பிறந்த நாளை இந்த முறை கொண்டாட ராஜ்தாக்கரேவின் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. சிவசேனை கட்சியினருக்கு தங்களது பலத்தைக் காட்டும் முகமாகவும், வட இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சிவாஜி ஜெயந்தியை பயன்படுத்திக் கொள்ள ராஜ்தாக்கரே முயல்வதாக கருதப்படுகிறது.
சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டம் தொடர்பாக ராஜ் தாக்கரே கட்சியின் நிர்வாகி சந்தீப் தேஷ்பாண்டே கூறுகையில், மராட்டிய மன்னர் சிவாஜி பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. எங்களது கட்சி சார்பில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இருந்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சேனைத் தொண்டர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.
வெளிமாநிலத்தவர்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறவேண்டும் என்று ராஜ் தாக்கரே கடந்த மாதம் பகிரங்கமாக அறிவித்தபோது பெரும் கலவரம் மூண்டது. இதையடுத்து பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவதற்கும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பதற்கும் ராஜ் தாக்கரேக்கு மும்பை போலீசார் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் தங்கள் அமைப்பின் பலத்தைக் காட்டுவதற்கு இந்த விழாவை ராஜ் தாக்கரே பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
ராஜ் தாக்கரே கட்சியினர் சிவாஜி பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் மும்பையில் வாழும் வட இந்தியர்கள் உள்ளனர்.