கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் உடன்பாடில்லை - கருணாநிதி
சென்னை: கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவதை தான் ஏற்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி தீவிர கிரிக்கெட் பிரியர். இந்தியா விளையாடும் போட்டிகளை பார்க்காமல் விட மாட்டார். பார்க்க நேரம் இல்லாவிட்டால் அவ்வப்போது ஸ்கோர் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் தவற மாட்டார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியன் பிரிமீயர் லீக் வீரர்களை ஏலம் விடும் முறை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கிரிக்கெட் விளையாட்டில் தற்போது வீரர்கள் ஏலம் விடப்படுகிற நிலை வந்துள்ளது. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் கருணாநிதி.
அதிமுக, பாஜக கூட்டணி ஏற்படுமா என்று கேட்டபோது, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், மாநில அரசுக்கு பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி ஒதுக்கீடுகளில் மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே வலியுறுத்தியுள்ளோம்.
இதுமட்டுமல்லாமல், பல்வேறு அதிகாரங்களில் மாநில அரசுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதான் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி என்றார் கருணாநிதி.
வழக்கறிஞர் ஜோதி திமுகவில் இணைந்துள்ளதால், ஜெயலலிதா தொடர்பான வழக்குகள் என்னவாகும் என்ற கேள்விக்கு, ஜோதியே இதற்கு நாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார் என்றார்.