தொடர் மழையால் ஊட்டி மலை ரயில் ரத்து
ஊட்டி: தொடர் மழை காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மரங்கள் விழுந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் குன்னூர் - பார்லியார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் இன்று (23) முதல் வரும் 26 ம் தேதி வரை 4 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் அதிகாரி ரவீந்திரன் கூறுகையில் நீலகிரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை ரயில் பாதையில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
ஆனால் குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரயில் போக்குவரத்து வழக்கம் போல் தொடரும் என்றார் அவர்.
அமராவதி பால சீரமைப்பு பாதிப்பு
இதற்கிடையே, கரூரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அமராவதி பாலத்தை சீரமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கரூரில் பலத்த மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டுள்ளது.
இரட்டை வாய்க்கால், ராஜவாய்ககால், போன்ற வாய்க்கால் பகுதியில் தண்ணீர் சென்றதே இல்லை. இந்த நிலை மாறி அந்த வாய்க்கால்களில் இரு கரைகளையும் தொட்டு வெள்ள நீர் சென்றது.
மேலும் அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஒடுகின்றது.
இதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் தான் கரூர் அமராவதி பாலத்தில் பழுது ஏற்பட்டது.
இதனால் சில காலம் பாலத்தை மக்கள் பாதுகாப்பு கருதி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்ட்டிருந்தது. பின்பு அந்த தடை விலக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்து போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பெய்து வரும் கடும் மழை காரணமாக கரூர் அமராவதி ஆற்றின் புதிய பாலம் சீரமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்தில் பணி முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் விரைந்து செய்யப்பட்டன. இதற்காக பாலத்தின் வழியாக சென்ற போக்கு வரத்தை சுக்காலியூர், சேலம் பைபாஸ், வையாபுரி நகர் வழியாக திருப்பி விடப்பட்டது.
இதனால் பொதும்ககள் சுமார் 5 கி.மீ. சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடியில் மக்கள் மறியல்
தூத்துக்குடி பெருமாள்புரம், போல்டன்புரம் மக்கள் மழைநீரை வெளியேற்ற கோரி ரோட்டில் மரங்களை வெட்டி போட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீரை உடனடியாக வெளியேற்ற கோரி முத்தையாபுரம் ஸ்பிக் நகரில் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
மாலையில் தூத்துக்குடி பெருமாள்புரம் மற்றும் போல்டன்புரம் பகுதி மக்கள் தங்கள் தெருக்களில் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடுவதால் அதனை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே ரோட்டில் மரங்களை வெட்டி போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500 குடும்பங்கள் தவிப்பு
ராமநாதபுரம் அருகில் உள்ள கமுதியில் கன மழையால் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிந்தது. 500 -க்கும் குடும்பங்கள் தவித்து வருகிறது.
கமுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிந்தன. சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதம் அடைந்தது.
சாயல்குடியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்க இடம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.