நான் விஜய்காந்துடன் அரசியலே பேசலீங்க.. அருண்குமார்
ஆந்திராவைச் சேர்ந்தவரான அருண்குமார் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரானது முதல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தலைவரான கருணாநிதியை சந்திக்கவில்லை. மாறாக தேமுதிக தலைவர் விஜய்காந்தை விமான நிலையத்தில் சந்தித்தார்.
மேலும் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் அதை காலம் வரும்போது சொல்வதாகவும் குண்டு போட்டார். இதையடுத்து திமுக-காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லிக்கு அழைக்கப்பட்ட அருண்குமாருக்கு சோனியாவிடம் டோஸ் கிடைத்தது. இதையடுத்து கூட்டணி குறித்தெல்லாம் காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். நான் விஜய்காந்துடன் அரசியல் பேசவில்லை என பல்டியடித்தார்.
இதன் பிறகு கருணாநிதியை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு அலைந்து கொண்டுள்ள இவருக்கு இதுவரை அதற்கான வாய்ப்பு தரப்படவே இல்லை.
இந் நிலையில் தமிழகம் பக்கம் வருவதையே குறைத்துக் கொண்டுவிட்ட அருண்குமார் டெல்லியில் தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்றும் அவர் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையி்ல்,
திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக உள்ளது. இதனால் கூட்டணியை மாற்ற வேண்டிய அவசியமே இப்போது இல்லை.
நான் விமானத்தில் பறந்தபோது விஜய்காந்தை சந்தித்தது மட்டும் தான் உண்மை. மற்றபடி நாங்கள் அரசியல் பேசவே இல்லை. இது தொடர்பான செய்திகள் அடிப்படையே இல்லாதவை. காங்கிரஸ் தலைமையும் விஜய்காந்துடன் பேசவில்லை.
நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. கூட்டணி தர்மத்தை மீறியதாக எங்களை திமுகவும் புகார் கூறவில்லை என்றார் அருண்குமார்.