நாய்க் கடி சிகிச்சைக்கு ரேஷன் கார்ட் அவசியம்-அரசு
சேலம்: அரசு மருத்துவமனைகளில் நாய்க் கடிக்கு ஊசி போட வரும் நோயாளிகள் ரேஷன் அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாய்க் கடி நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக ஊசி போடப்படுகிறது. நாய்க் கடி மருந்துக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை செலவிடுகிறது.
நாய்க் கடி மருந்தின் விலை அதிகம் என்பதால் ஏழைகளால் சிகிச்சை பெற முடியாது. இதனால் இந்த மருந்தை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த வாய்ப்பை வசதியானவர்களும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் சேலம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாய்க்கடி மருந்து ஒன்றின் விலை ரூ.400. ஏழைகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த மருந்து வழங்கப்படுகிறது.
வசதி படைத்தவர்களும் இங்கு வந்து இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். இதை கட்டுப்படுத்தவே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது ரேஷன் அட்டை, உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக எந்த கெடுபிடியும் செய்யப்படுவதில்லை என்றார்.
நாயிடம் கடிபட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு விரையும்போது ரேஷன் கார்டையா எடுத்துக் கொண்டு வர முடியும்.