டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் சுட்டுக் கொலை
இவரது தலைமையின் கீழ் டெல்லி போலீஸார் பல தீவிரவாதிகள், ரவுடிகளை வேட்டையாடியுள்ளனர். இதன் காரணமாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயர் ராஜ்பீர் சிங்குக்குக் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்பீர் சிங், ஹரியாணா மாநிலம் குர்கானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஜ்பீர் சிங்குக்கும், விஜய் பரத்வாஜ் என்கிற ரியல் எஸ்டேட் பெரும் புள்ளிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. அவரை பரத்வாஜ்தான் சுட்டுக் கொன்றுள்ளார். கொலை செய்த பின்னர் குர்ஜான் போலீஸில் அவர் சரணடைந்தார்.
தனக்கும், ராஜ்பீர் சிங்குக்கும் இடையே பணத் தகராறு இருந்ததாகவும், அதுகுறித்து சிங்கிடம் கேட்டபோது சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும், இதையடுத்து தானே அவரை சுட்டுக் கொன்று விட்டதாக பரத்வாஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்ட ராஜ்பீர் சிங் சுட்டுக்க ொல்லப்பட்டுள்ளது டெல்லி காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண சப் இன்ஸ்பெக்டராக காவல் பணியைத் தொடங்கிய சிங், 13 ஆண்டுகளில், கூடுதல் ஆணையர் பொறுப்புக்கு உயர்ந்து சாதனை படைத்தவர். இதுவரை மொத்தம் 56 பேரை என்கவுண்டர் மூலம் கொன்று குவித்துள்ளார்.
ஆனால் தெற்கு டெல்லியில், கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி 2 தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றார். ஆனால் அவர்கள் தீவிரவாதிகளே என்று பின்னர் தெரிய வந்ததால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
2005ம் ஆண்டு அவர் லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கில் சிக்கினார். மேலும் அவர் மீது பல்வேறு நிலத்தகராறு தொடர்பான புகார்களும் இருந்து வந்தன.
கடந்த ஆண்டு குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் நவம்பர் மாதம் மீண்டும் அதே பிரிவுக்கு திரும்பி வந்தார்.
இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல்கள் இருந்து வந்ததால் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. டெல்லி காவல்துறையில் இத்தகைய உச்சகட்ட பாதுகாப்பு தரப்பட்டிருந்த ஒரே காவல்துறை அதிகாரி இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.