தலித் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முயற்சி-மீராவின் 'உஷார்' நடவடிக்கையால் தவிர்ப்பு
மத்திய பணியாளர் நலத்துறை உருவாக்கியுள்ள புதிய மசோதாவின் வரைவு திட்டத்தை அமைச்சர்கள் குழு சில நாட்களுக்கு முன் இறுதி செய்தது.
அப்போது அந்த மசோதாவில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான காலியிடங்களை, பிற சமூகத்தினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்று கூறப்பட்டிருந்ததோடு,
அதே நேரத்தில், இந்தப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கும்பட்சத்தில், அதில் ஒரு பகுதியை மற்ற பிரிவினரை கொண்டு நிரப்பலாம் என்ற புதிய விதிமுறை சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த விதிமுறையை மத்திய அரசில் உள்ள சில சக்திகளும் சில அதிகாரிகளும் இடையில் சொருகிவிட்டிருந்தனர்.
மசோதாவை மிக உன்னிப்பாக படித்தபோது இது சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமாரின் கண்ணில் பட்டது. இதனால் டென்சனான மீரா குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கோட்டாவை அபகரிக்கும் முயற்சி இது என்று குரல் உயர்த்திய மீரா, இந்த மசோதா நிறைவேறினால் அது மத்திய அரசுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
மீரா குமாரின் இந்த கருத்தை மூத்த அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வானும் ஆமோதிக்கவே, இந்த விதிமுறையை நீக்க, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு ஒப்புக் கொண்டது.
ஏற்கனவே பல்வேறு அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோட்டாவை நிரப்பாமல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசுப் பணியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கோட்டா இடங்கள் காலியாக உள்ளன.
தகுதியான தலித் கேண்டிடேட் கிடைக்கவில்லை என்று இதற்கு சாக்குபோக்கு கூறி வருகின்றனர்.
இந் நிலையில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கோட்டாவிலேயே மறைமுகமாக கை வைக்க (தகுதியான தலித் பணியாளர் கிடைக்காவிட்டால் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என்ற விதியை புகுத்தி) முயன்றுள்ளனர்.
இந்த ஆபத்தைத் தான் மீரா குமார் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து தவிர்த்துள்ளார்.