எடியூரப்பாவுக்கு 'குண்டாஸ்'-தமிழக விவசாயிகள் கோரிக்கை
ஓகனேக்கல்: ஓகனேக்கலில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களை தூண்டி விட்டு வரும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஓகனேக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது, அங்கு தமிழகம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கோரி கர்நாடகத்தைச் சேர்ந்த சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு வாரம் முதல்வராக இருந்தவரும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான எடியூரப்பா, அத்துமீறி ஓகனேக்கலுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
எடியூரப்பாவின் செயலுக்கு தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் முதல் நபராக கடும் கண்டனம் தெரிவித்தார். பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கண்டித்தன. திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் சின்னச்சாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓகனேக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது சின்னச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன், கன்னடர்களிடையே இன உணர்வைத் தூண்டி, போராட்டம் நடத்த தூண்டி வருகின்றனர் கர்நாடக அரசியல்வாதிகள்.
இதில் மூத்த அரசியல்வாதியான எடியூரப்பா அத்துமீறி ஓகனேக்கலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியுள்ளார். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.
கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து நாளை ஓகனேக்கலில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications