நிவாரண உதவியில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்- பாமக
தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரண உதவி பெறுவதில் இடைத் தரகர்கள் குறுக்கீடு உள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தின் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழக சட்டமன்றம் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு தருவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 50,000 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்ட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் முறையாக அவர்கள் ஆய்வு செய்யாமல் கடமைக்கு என்று ஆய்வு செய்கின்றனர்.
விளை நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் முறையாக போய்ச் சேரவில்லை.
நிவாரண உதவி பெறுவதில் இடைத்தரகர்கள் குறுக்கீடு உள்ளது. அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தவிர்க்க வேண்டும்.
நாங்கள் பார்வையிட்ட பகுதிகளின் நிலை குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்போம் என்றார்.