தமிழகத்தில் மின்வெட்டால் ஜவுளி உற்பத்தி பாதிப்பு-இளங்கோவன்
மதுரை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு காரணமாக ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரையில் ஜவுளிப் பூங்கா அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதை அமைக்க மத்திய அரசு ரூ. 30 முதல் 60 கோடி வரை மானியமாக தரும்.
நாட்டில் பஞ்சு உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்தாலும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் பஞ்சுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறுகின்றனர். இதனால் பஞ்சு ஏற்றுமதியில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி பாதிப்புக்கு முக்கிய காரணம் மின் வெட்டுதான். இக்குறைகளை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துவதை நான் தவறாக கருதவில்லை. தொழிலாளர் பிரச்னைக்காக திமுகவின் தொழிற்சங்கமே சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றாவது அணி அமைத்தால் வரும் தேர்தலில் அவர்களுக்கு பெரும் தோல்வியே கிடைக்கும். அது மட்டுமல்ல இந்த மூன்றாவது அணி, மூன்றாவது இடத்திற்குக் கூட வர முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications