வீட்டில் தனியே இருந்த பெண்ணுக்கு கத்திக் குத்து- தாலி பறிக்க முயன்ற கொள்ளையன் வெறிச் செயல்
சென்னை: சென்னையில் வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தாலியைப் பறிக்க முயன்ற திருடன் அந்தப் பெண்ணை வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டான்.
வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரைச் சேர்ந்த வேதகிரி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (48) பொதுப் பணித்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகன் தியாகராஜன் கால்சென்டரில் பணியாற்றி வருகிறார். நேற்று வேதகிரி பெங்களூர் சென்றுவிட்டார். தியாகராஜன் இரவுப் பணிக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் கலைச்செல்வி மட்டும் தனியாக இருந்தார்.
இந் நிலையில் ஒரு நபர் வீட்டுக் கதவை தட்டினான். கலைச்செல்வி கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதற்குள் அவரை உள்ளே தள்ளிக் கொண்டு அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.
பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி கலைசெல்வியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றான். அவர் தடுக்கவே அந்த கொள்ளையன் கலைசெல்வியை வயிற்றில் கத்தியால் குத்தினான். இதில் அவருக்கு 3 இடங்களில் குத்து விழுந்தது.
கலைச்செல்வி உதவி கேட்டு அலறவே சத்தம் கேட்டு அண்டை வீட்டினர் ஓடி வந்தனர். இதையடுத்து அவரை தோள் பகுதியில் மீண்டும் வெட்டிவிட்டு அந்தக் கொள்ளையன் தப்பியோடிவிட்டான்.
படுகாயமடைந்த கலைச்செல்வி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கறுப்பு பேண்ட், கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்த அந்த கொள்ளையனுக்கு 22 வயது தான் இருக்கும் எனத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன் அண்ணாநகர், முகப்பேர், திருமங்கலம் பகுதிகளில் ஒரு சைக்கோ' கொள்ளையன் அலைந்தான். அவன் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தாலியை மட்டும் பறித்துவிட்டு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி வந்தான். இதுவரை அவனிடம் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சில காலமாக அவனது தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் வளசரவாக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவன் தான் முந்தைய கொலைகளையும் செய்த தாலிக் கொள்ளையனா என்று விசாரணை நடந்து வருகிறது.
இவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications