புதுச்சேரியில் திடீர் கலவரம்; கண்ணன் கார் மீது தாக்குதல்-பந்த்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு அக்கட்சியினர் பந்த் நடத்தினர். பந்த்தின்போது கலவரம் வெடித்தது. ஏராளமான பேருந்துகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கண்ணன். இவர் நேற்று பிற்பகல், வில்லியனூர் அருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். போய் விட்டுத் திரும்பும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்ணனின் கார் மீது தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலிலிருந்து கண்ணன் தப்பினார்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து 6 மணி நேர பந்த் நடத்த புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி பந்த்துக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகளை அடைக்க வேண்டும், பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று கூறி கண்ணன் கட்சியினர் வன்முறையில் இறங்கினர்.
திறந்திருந்த கடைகளை அடித்து நொறுக்கி மூடக் கூறினர். பேருந்துகளையும் அவர்கள் விடவில்லை. இந்த திடீர் வன்முறையால் புதுச்சேரி முழுவதும் கலவர சூழ்நிலை காணப்பட்டது. மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
ஒரு அரசியல் கட்சியினரைப் போல இல்லாமல் ரவுடித்தனமாக செயல்பட்ட கண்ணன் கட்சியினரின் செயலால் புதுவை மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
நிலைமை மோசமாகி விடாமல் தடுப்பதற்காக புதுவை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications