எம்.ஜி.எம் தீம் பார்க்கில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணம்
சென்னை சூளையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தி.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இவர் தனது நண்பர்களோடு எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்டுக்கு சென்றார். அங்கு பல்வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட்ட சுரேஷ்குமாரும், அவரது நண்பர்களும், நீச்சல்குளத்தில் நீச்சலடிக்க இறங்கினர்.
நீச்சலடிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுரேஷ்குமார் தத்தளிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சுரேஷ்குமார் உயிரிழந்து விட்டார்.
எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.
மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.
நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.
கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.
சுரேஷ்குமார் மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.