வெள்ளச் சேதம்-ராமநாதபுரத்தி்ல் ஸ்டாலின் ஆய்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். கடந்த 22ம் தேதி மதுரை வந்த அவர், விருதுநகர் மாவட்டம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.
இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டார். அதிக பாதிப்புக்குள்ளான ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன பகுதிகளை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் மழையால் அழுகிய பயிரை அமைச்சரிடம் காட்டி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார்.
பனைக்குளத்தில் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளை சந்தித்தார். இதையடுத்து பூசேரி பகுதிக்கு சென்று மழையில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டார்.
முதுகுளத்தூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட 32 வீடுகளை பார்வையிட்ட அவர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சாயல்குடி பகுதியில் மழையால் வீட்டை இழந்து திருமண மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
ஏக்கருக்கு ரூ.15,000-சரத்குமார் கோரிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை அ.கி.ச.ம.க. தலைவர் சரத்குமார் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தபோதுதான் பாதிப்பு அதிகம் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.15,000 வழங்க அரசை வலியுறுத்துவோம். இது தொடர்பாக அறிக்கை தயாரித்து முதல்வருக்கு அனுப்ப உள்ளேன்.
வெள்ள சேதத்தை அதிகாரிகள் முழுமையாக பார்வையிடவில்லை. எனவே சேத மதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வெள்ள நிவாரண பணிகளில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வெள்ள சேத பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட வேண்டும்.
தற்போது அரசு ஓதுக்கியுள்ள ரூ.100 கோடி நிதியை அதிகரிக்க வேண்டும். நிவாரண நிதி விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்திலும் சேதமடைந்த உப்பாளங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.