மாறு வேடத்தில் டிஐஜி ரெய்ட்-லாட்டரி விற்ற 39 பேர் கைது
கரூர்: தமிழக அரசால் தடை செய்ப்பட்ட லாட்டரி சீட்டுகளை கரூரில் விற்பனை செய்த 39 பேரை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் மாறு வேடத்தில் சென்று கைது செய்தார்.
கரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் போலீஸ் ஆதரவுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை அமோகமாக நடை பெற்று வந்தது. குறிப்பாக கரூர் காவல் நிலையம் அருகிலேயே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வந்தது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர். இந்நிலையில் நேற்றிரவு மாறு வேடத்தில் டிஐஜி அசோக்குமார் தாஸ் கரூர் வந்தார். லாட்டரி விற்பனை நடக்கும் இடங்களுக்கு தனியாக சென்று, லாட்டரி சீட்டு கேட்டார்.
கடைக்காரர்கள் லாட்டரி சீட்டு கொடுத்தபோது அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். அவர்களிடம் இருந்த செல்போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தார்.
அடுத்தடுத்து 5 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்த 39 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.2.40 லட்சமும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள், லேப் டாப், கம்யூட்டர், 24 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்து. லோக்கல் போலீசாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. டிஐஜியின் இந்த அதிரடி ரெய்டு மாவட்ட காவல் துறையை கதிகலங்கச் செய்துள்ளது.