நிலகம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து காஞ்சிபுரத்தில் உள்ள நிலப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறில் 3000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக செய்யாறு அருகில் உள்ள மங்கல் கிராமத்தில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிப்காட் தொழில் பூங்கா நிறுவப்படவுள்ளது.
மீதமுள்ள 2300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு சமீபத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அழிஞ்சல்பட்டு கிராமத்தில் இந்த நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் கிராமத்தில் நில விற்பனை, நிலப்பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாத என அரசு அறிவித்துள்ளது. அழிஞ்சல்பட்டு தவிர செய்யாறைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நில விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அழிஞ்சல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், கிராம பஞ்சாயத்துத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று காஞ்சிபுரத்திற்கு திரண்டு வந்தனர்.
அங்குள்ள நிலப் பதிவாளர் அலுவலகத்ைத அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக தங்களது நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, நிலப் பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கிராமத்தினரை சமாதானப்படுத்தினர்.