47 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு
ஆக்ரா: உ.பி. மாநில் ஆக்ரே அருகே தேரி கிராமத்தில் 47 அடி ஆழ போர்வெல் குழியில் விழுந்த இரண்டரை வயது சிறுமி வந்தனா 26 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள்.
தேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி வந்தனா, தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது 47 அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் விழுந்து விட்டாள்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டது. சிறுமி உயிருடன் இருப்பதை அறிந்த ராணுவத்தினர் போர்வெல் கிணற்றுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டும் பணியைத் தொடங்கினர்.
மறுபக்கம் போர்வெல் கிணற்றில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த வந்தனாவுக்கு மேலிருந்து ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. உணவுகளும் அனுப்பப்பட்டன.
மிகுந்த கவனத்துடன் அருகில் பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. மறுபக்கம் வந்தனா நினைவுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள அடிக்கடி அவளுடன் மேலிருந்தபடி டாக்டர்கள் பேசி வந்தனர். அவர்கள் கூப்பிட்டபோதெல்லாம் வந்தனா பதிலளித்ததால், அவள் நல்ல நினைவுடனும், தைரியத்துடனும் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் அருகில் தோண்டப்பட்டு வந்த பள்ளம் முடிவு பெற்று, அங்கிருந்து வந்தனா விழுந்திருந்த பள்ளத்திற்கு பக்கவாட்டில் ஒரு பாதை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சென்ற ராணுவ வீரர் ஒருவர் வந்தனாவை பத்திரமாக மீட்டார். இதை அறிந்து மேலே கூடியிருந்த கிராமத்தினரும், ராணுவத்தினரும் உற்சாகமாக கைகளைத் தட்டி மகிழச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பத்திரமாக வந்தனா மேலே கொண்டு வரப்பட்டாள்.
இந்த மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது குறித்து ஆக்ரா சரக டிஐஜி கமல் சக்சேனா கூறுகையில், பால், பிஸ்கட், குளுகோஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து வந்தனாவை நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். எங்களது முயற்சியின் விளைவாக தற்போது வந்தனா பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள் என்றார்.
வந்தனா பத்திரமாக வர வேண்டும் என்று வேண்டி வந்தனாவின் பெற்றோரும், கிராமத்தினரும் அப்பகுதியில் குழுமி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். வந்தனாவை பத்திரமாக பார்த்த பின்னர்தான் அவளது பெற்றோருக்கு நிம்மதியே வந்தது.
பள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட வந்தனா உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வந்தனா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலம் குருசேத்திராவில் இதேபோல பிரின்ஸ் என்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்து, அவனையும் ராணுவத்தினர் கடுமையாகப் போராடி மீட்டது நினைவிருக்கலாம்.