கோவையில் கவுன்சிலர்கள் அடிதடி-பெண் கவுன்சிலர் கை ஒடிந்தது
கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் நேற்று தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இந்த மோதலில் சிக்கிய திமுக பெண் கவுன்சிலர் கையில் முறிவு ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டம், பில்லூர் குடிநீர் 2-வது திட்டம் ஆகியவற்றின் டெண்டர் தொடர்பான மாநகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
கூட்டம் தொடங்கியதும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக அதிமுக மற்றும் மதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் இதற்கு துணை மேயர் கார்த்திக் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், திடீரென அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கும், திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியத்துக்கும் இடையே வாக்குவாதம் தடித்தது. இருவரும் கடுமையாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அது திடீரென அடிதடியாக மாறியது. இருவரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக இரு தரப்பு கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள் ஓடி வந்தனர்.
சரமாரியாக கும்மாங்குத்து!:
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, திமுக, மதிமுக கவுன்சிலர்கள் சரமாரியாக அடித்துக் கொண்டு விழுந்ததால் நாற்காலிகள் உடைந்து விழுந்தன. சுப்ரமணியமும், பிரபாகரனும் கைகளால் மாறி மாறி கும்மாங்குத்து விட்டனர்.
இந்த மோதலைத் தடுக்க முயன்ற திமுகவைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி ஜெயசீலன் மீது கவுன்சிலர்கள் விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். பின்னர் மருத்துவமனைக்குப் போய் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார்.
இந்த அமளி சற்றே ஓய்ந்த நிலையில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன. அப்போது அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து மேயருக்கு முன்பு நின்றபடி கோஷமிட்டனர். அதிமுக கவுன்சிலர் ராஜ்குமார் தீர்மான நகலைப் பறித்து கிழித்து எறிந்தார்.












Click it and Unblock the Notifications