எங்கள் ஆசான் அரசியல் படமாக இருக்கும்-விஜயகாந்த்
விஜயகாந்த் நடிக்கும் 150-வது படம் அரசாங்கம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம. நாராயணன் முதல் கேசட்டை வெளியிட்டார். சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இதேபோல மாவட்டத் தலைநகரங்களிலும் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியின்போது விஜயகாந்த் பேசுகையில், அரசாங்கம் அரசியல் படமல்ல. இதில் எனது கட்சி கொடி, சின்னம் எதையும் பயன்படுத்தவில்லை. இது போலீஸ் கதை.
அடுத்து 'எங்கள் ஆசான்' படத்தில் நடிக்கிறேன். அதில் அரசியல் இருக்கும்.
150 படங்களில் நடித்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது. தமிழை தவிர வேறு மொழிகளில் நடிக்கவில்லை. நிறைய பேர் என்னை வைத்து படம் எடுக்க கால்ஷீட் கேட்கின்றனர். அரசியல் பளு காரணமாக என்னால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை.
அடுத்து உள்ளாட்சி!
அரசாங்கம் வித்தியாசமான கதை. ஒரு கொலை நடக்கிறது. அதை கண்டு பிடிக்கப் போகும்போது, அடுத்தடுத்து பல மர்மங்கள் வெளியாகிறது. அதை எப்படி சரி செய்கிறோம் என்பதுதான் கதை.
முதலில் படத்துக்கு சர்க்கார் என்றுதான் பெயரிட்டோம். ஆனால் தமிழ்ப் பெயர் பிரச்சினை எழுந்தது. இதனால் அரசாங்கம் என்று பெயர் வைத்தோம். இன்னொரு படத்துக்கு உள்ளாட்சி என்று பெயர் வைத்துள்ளோம். நீங்கள் ஏதோ நினைக்கலாம். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.
என் பெயரில் உள்ள ரசிகர் மன்றங்கள் தொடர்ந்து இருக்கும். டிவி சேனல் தொடங்குவதற்கு விண்ணப்பித்துள்ளோம்.
சினிமாவில் மார்க்கெட் இருக்கும் வரைதான் மரியாதை. இல்லாவிட்டால் ஒதுக்கிவிடுவார்கள். சினிமா இப்போது மாறிவிட்டது. போட்ட பணத்தை 3 வாரத்துக்குள் எடுக்க விரும்புகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகள் இத்துறைக்கு வந்துவிட்டன என்றார் விஜயகாந்த்.