'ஓகேனக்கல்': எதியூரப்பா மீது வைகோ தாக்கு
சென்னை: குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் எதிர்த்து ஒகேனக்கல்லில் மதிமுக சார்பில் 31ம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒகேனக்கல் பகுதியில் தர்மபுரி, மாவட்ட மக்களின் நீண்ட காலத்தேவையான கூட்டுத் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, கர்நாடகத்தின் கன்னட அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காவிரிப் பிரச்னையில், தமிழகத்துக்கு உரிய நீதி கிடைக்காமல், நமக்குத் தர வேண்டிய தண்ணீரையும் தராமல், கர்நாடக மாநிலம் தொடர்ந்து செய்யும் அநீதியை, மத்திய அரசு தடுக்க முன் வரவில்லை.
நம மாநில எல்லைக்கு உள்ளேயே வந்து ஒகேனக்கல் பகுதிகளை எடியூரப்பா பார்வையிட்டதும் நமது திட்டத்துக்கு எதிராகக் கூச்சல் இட்டதும், விபரீதத்தை விலைக்கு வாங்குகிற வேலை ஆகும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக மாநில அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கண்டனம் தெரிவிக்கவும், கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற 31-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு மதிமுக சார்பில் ஒகேனக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை வகிப்பார். கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கண்டன உரை ஆற்றுவார். தர்மபுரி மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சம்பத், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மதிமுகவை அழிக்க திமுக சதி:
இந் நிலையில் இன்று திருச்சியில் மதிமுக சட்டப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ,
மதிமுகவை அழிக்க திமுக முயல்கிறது. இதற்காக என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள். ஆனால், யாராலும் மதிமுகவை அழிக்க முடியாது என்றார்.