மக்களை ரொட்டி சாப்பிட சொல்கிறீர்களா-அதிமுக: எலிக்கறி நினைவிருக்கா?-திமுக
சென்னை: அதிமுக ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலைமை இல்லை என அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
தங்கமணி (அதிமுக): பட்ஜெட்டில் ரொட்டிக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை இந்த அரசு கட்டுப்படுத்தாததால், மற்ற பொருட்களை மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே ரொட்டியை சாப்பிடுங்கள் என்று கூறும் நிலை உள்ளது.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: இந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டதாக எந்த செய்தியும் வந்ததில்லை.
தங்கமணி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான ராமதாஸ், தா.பாண்டியன் போன்றவர்களின் பேச்சுக்களே இதற்கு உதாரணம்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: உங்கள் கட்சி ஆட்சியில் சொந்த கட்சி எம்.எல்.ஏக்களையே ஆள் வைத்து தாக்கிய சம்பவங்கள் நடந்தன என்பதை நினைவூட்டுகிறேன்.
தங்கமணி: மின் தட்டுப்பாட்டால் இருண்ட தமிழகமாகி விட்டது.
ஆற்காடு ஆற்காடு வீராசாமி: எந்த ஊரில் இருட்டாக இருக்கிறது என்று சொல்லுங்கள். நான் உறுதியாக கூறுகிறேன், தமிழகத்தில் தற்போது எந்த நேரத்திலும் மின் தட்டுப்பாடு இல்லை. கடந்த 10 நாட்களில் ஒரு கிராமத்தில் கூட மின்சாரம் இல்லை என்று யாரும் கூறவில்லை. இதை மின் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது ஆதாரத்துடன் சொல்ல தயார்.
தங்கமணி: மாதத்துக்கு ஒரு முறை தான் அமாவாசை வரும். ஆனால், தற்போது வாரத்துக்கு ஒரு முறை அமாவாசை வருகிறது.