எஸ்எஸ்எல்சி தேர்வு: ஊனமுற்ற மாணவருக்கு அனுமதி மறுப்பு
நெல்லை: இரண்டு கைகளும் ஊனமுற்ற மாணவருக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மற்றொருவரை வைத்து எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நெல்லை அருகேயுள்ள மானுர் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சொக்கலி்ங்கம். இவரது ஐந்தாவது மகன் மணிகண்டன். பிறவியிலேயே கை, கால் விரல்கள் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. இத்துடன் பார்வை கோளாறும் உள்ளது.
மணிகண்டன் தற்போது மேலஇலந்தகுளத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கை விரல்கள் வளர்ச்சியடையாத நிலையில் இவரால் வேகமாக எழுத முடியாது.
நேற்று நடந்த பொதுத் தேர்வின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைகளை எழுதமுடியாமல் மணிகண்டன் மிகவும் கஷ்டப்பட்டார்.
குடும்ப வறுமையிலும் இரண்டு கைகளும் ஊனமுற்ற தனது நிலையை கருதி கூடுதல் தேர்வு நேரம் வழங்கவேண்டும். அல்லது, பார்வையற்ற மாணவர்கள் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதுவது போன்ற சலுகையையாவது தரவேண்டும் என்று மணிகண்டன் கோரினார். ஆனால் பள்ளிநிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால், "நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் நேரம் கிடைக்காததால் 7 மற்றும் 5 மதிப்பெண்கள் கொண்ட வினாவிற்கு விடையளிக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் மற்ற தேர்வுகளையும் சரியாக எழுத முடியாத நிலை ஏற்படும்" என்று மணிகண்டன் கவலை தெரிவித்தார்.