நடுரோட்டில் ஏட்டை தாக்கி ரகளை- வக்கீல் கைது
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஏட்டை தாக்கி நடுரோட்டில் ரகளை செய்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெருவை சேர்ந்த ரத்தினம் மகன் கண்ணன். சட்டக்கல்லூரியி்ல் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், அதனை பார் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. வட்டித் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் கண்ணன் தனது வீ்ட்டிலிருந்து பைக்கில் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். விவிடி சந்திப்பு சிக்னல் அருகே சிக்னலை மீறி செல்ல முயன்றபோது நடுரோட்டில் அவரது பைக் எஞ்சின் ஆஃப் ஆகிவிட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கு போக்குவரத்தை ஓழுங்குபடுத்திக் கொண்டிருந்த டிராபிக் ஏட்டு சாந்தானம் கண்ணனை பார்த்து சத்தம் போட்டார். இதனால் கண்ணனுக்கும், ஏட்டு சந்தானத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென்று கண்ணன் ஏட்டுவின் கையை பிடித்து முறுக்கினார். நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து அவர்களை விலக்கி விட்டு சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அவரிடமும் தகராறு செய்தார்.
இதையடுத்து ஏட்டு சந்தானம் கொடுத்த புகாரின் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.












Click it and Unblock the Notifications