சாட்டிங்கில் எச்சரிக்கை தேவை: லத்திகா சரண்
நெல்லை: சைபர் குற்றங்களைத் தவர்க்க வேண்டுமென்றால் இன்டர்நெட் சாட்டிங்கில் சுய விவரங்களை வெளியிடக்கூடாது என்று தமிழக சிபிசிஐடி ஏடிஜிபி லத்திகா சரண் வலியுறுத்தினார்.
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக குற்றவியல் துறை சார்பில் சைபர் கிரைம் குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. சமூகவியல் துறை தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துறை தலைவர் மாதவசோமசுந்தரம் வரவேற்றார். கணிணி துறை தலைவர் சதாசிவம், சைபர் கிரைம் உதவி கமிஷனர் பாலு ஆகியோர் பேசினார்.
கருத்தரங்கை துவக்கி வைத்த சிபிசிஐடி ஏடிஜிபி லத்திகாசரண் பேசியதாவது,
உலக அளவில் சைபர் கிரைம் சம்பவங்கள் பெருகி வருகின்றன. சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இன்டர்நெட் மூலம் இத்தகைய குற்றங்கள் நிகழும்போது ஒருவர் இந்தியாவிலும், மற்றவர் வெளிநாட்டிலும் இருக்கக்கூடும். இதனால் விசாரணை கடினமாகிறது. இன்டர்நெட் மூலம் தனி நபரது ரகசியங்களை சிலர் ஊரறிய செய்து விடுகின்றனர்.
குறிப்பாக இளம் பெண்கள் சாட்டிங் செய்யும்போது எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
குழந்தைகள் இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதை கண்காணிக்க வேண்டும். சமீப காலமாக சிலர் இ-மெயில் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். கிரடிட் கார்டு பாஸ்வேர்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இன்டர்நெட் மூலம் தெரிந்துகொண்டு மோசடி வேலைகளில் இறங்கி விடுகின்றனர் என்றார்.