ஏர்இந்தியா பஸ் மோதி விமான நிலைய ஊழியர் பலி
மும்பை: மும்பை விமான நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது ஏர்இந்தியா நிறுவன பஸ் மோதியதில் அதே இடத்தில் பலியானார்.
மும்பை விமானநிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் கென்யா நாட்டு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சரக்கு ஏற்றும் பணியில் இருந்தார் ஞானேஸ்வர் குந்தே என்ற ஊழியர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஏர்இந்தியா நிறுவன பஸ் சுமார் ஒரு டன் எடையுள்ள கண்டெய்னர் ஏற்றப்பட்ட டிராலி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதனால் நகர்ந்த டிராலி, அருகில் நின்றுகொண்டிருந்த ஞானேஸ்வர் குந்தே மீது இடித்தது. இதில் குந்தே கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அதேஇடத்தில் இறந்தார்.
விமானநிலையத்துக்குள் மணிக்கு 20 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறி ஏர் இந்தியா பஸ் ஓடியதால் இந்த விபத்து நடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பஸ் டிரைவர் தலைமறைவாகிவிட்டார். சாகர் போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடிவருகின்றனர்.