'திபெத்'-ஜார்ஜ் பெர்னான்டஸ் பல்டி
டெல்லி: திபெத் மக்களின் போராட்டம் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாஜ்பாய் அரசு பதவியில் இருந்தபோது 'திபெத், சீனாவின் ஒரு பகுதி' என கூறப்பட்டது. அது தவறான கருத்து, என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறேன் என மாஜி ராணுவ அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
பதவியில் இருக்கும்போது ஒரு மாதிரியும் பதவியில் இல்லாதபோது அப்படியே உல்டாவாகவும் பேசுவதிலும் வல்லவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
ராணுவ அமைச்சராக இருந்தபோது அமெரிக்காவுக்கு சென்றபோது அந் நாட்டு விமான நிலையத்தில் இவரது உடைகளைக் களைந்து சோதனை நடத்தினர் அந் நாட்டு அதிகாரிகள். இதை வெளியிலேயே சொல்லாமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மறைத்தார் ஜார்ஜ். பின்னர் வெளியில் இது தொடர்பாக செய்திகள் கசிந்தபோது அமைதியாக இருந்தார்.
பதவி போன பின்னர் அந்தச் சம்பவத்தை ஒப்புக் கொண்டதோடு, இனி அமெரிக்காவுக்கே போக மாட்டேன் என்றார்.
அதே போல குஜராத் வன்முறையின்போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு சிசுவை வெளியில் எடுத்து எறிந்து படுகொலை கொடுமை நடந்தபோது நாடாளுமன்றத்தில் அதை ஆதரிப்பது போல பேசி அதிர்ச்சி தந்தார். அப்போது பாஜக தலைவர் அத்வானி தான் தலையிட்டு அந்த சம்பவத்தை பெர்னாண்டஸ் ஆதரிக்கவில்லை என்று கூறி நிலைமையை சமாளித்தார்.
இந் நிலையில் இப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் அளித்துள்ள பேட்டியில்,
திபெத் மக்களின் போராட்டம் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாஜ்பாய் அரசு பதவியில் இருந்தபோது 'திபெத், சீனாவின் ஒரு பகுதி' என கூறப்பட்டது. அது தவறான கருத்து, என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறேன்.
இந்தியாவுக்கு மிகப் பெரிய அபாயத்தை விளைவிக்க கூடிய நாடுகளின் பட்டியலில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது.
இந்திய தூதர் நிருபமா ராவை சீன வெளியுறவு அமைச்சகம் நள்ளிரவில் அழைத்து இந்தியாவில் நடக்கும் திபெத் மக்களின் போராட்டம் பற்றி விளக்கம் கேட்டுள்ளது.
பெய்ஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டும். ஒலிம்பிக் தீபத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என்றார்.
பதவிக்கு வந்தால் சீனா விஷயத்தில் அப்படியே பல்டி அடிப்பார் ஜார்ஜ் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications