அதிமுக ஆட்சியில் விடுபட்ட திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம்-ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஆட்சியில் விடுபட்ட எல்லா திட்டங்களையும் இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது என அமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி எழுந்து, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றிய காவிரி குடிநீர் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
இந்த திட்டத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் டெண்டர் விடுவது உள்பட பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
அதிமுக ஆட்சியில் விடுபட்ட எல்லா திட்டங்களையும் இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.
பின்னர் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார்: நாங்குநேரி தொகுதி பரப்பாடியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உறுப்பினர் குறிப்பிட்ட இடத்தில் 110 மெகாவாட் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை உரிய நிலம் கிடைக்கவில்லை. உறுப்பினர் ஏற்பாடு செய்தால் அந்த துணை மின் நிலையத்துக்கு அடுத்த மாதமே அடிக்கல் நாட்ட நான் வரத் தயாராக இருக்கிறேன்.
வசந்தகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி 5 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.
வசந்தகுமார்: 30 நாட்களுக்குள் நிலம் வாங்கித் தர ஏற்பாடு செய்கிறேன்.
சேகர்பாபு (அதிமுக): சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதாக இந்த அவையில் 3 முறை அறிவிக்கப்பட்டது. எப்போது மின் நிலையம் அமைக்கப்படும்?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: ஆர்.கே. நகர் தொகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. தலைமைப் பொறியாளரிடம் கலந்து பேசி விரைவில் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications