For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நக்ஸலைட்டுகள்

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் நக்சலைட்டுகள் இருக்கலாம் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டிக்கும், தாசம்பட்டிக்கும் இடையே, கெரிகேபள்ளி ரயில்வே கேட்டுக்கு 200 மீட்டர் இடைவெளியில், வெள்ளிக்கிழமை காலை காலை 11.30 மணிக்கு பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸார் நடத்திய சோதனையில், ரயில் தண்டவாளத்தை இணைக்கும் கிளாம்ப் பகுதியில் 13 டெட்டனேட்டர்கள் பொருத்தப்பட்டு, ஆறு டெட்டனேட்டர் வெடித்தது தெரியவந்தது.

திருப்பத்தூரிலும் வெடித்தது:

இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை செவ்வாத்தூர் ரயில்வே கேட்டுக்கு 400 மீட்டர் தூரத்தில், ரயில் என்ஜின் கடந்த போது, ஒரு வெடி வெடித்தது.

இதனால், எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக காக்கங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், வெடி சத்தம் வெறும் பட்டாசு சத்தம் என கண்டறியப்பட்டது. இருப்பினும் இதுவும் நக்சலைட்டுகளின் சதியாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

என்ன காரணம்?:

போலீஸாரின் தொடர் வேட்டை காரணமாக கடுப்பாகியுள்ள நக்சலைட்டுகள்தான் இந்த செயலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் படு சுதந்திரமாக செயல்பட்டு வந்தனர். அருகாமையில் உள்ள ஆந்திர மாநிலத்திலிருந்து அடிக்கடி நக்சலைட்டுகள் தர்மபுரிக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

முன்பு தேவாரம் தலைமையிலான போலீஸ் படை, தர்மபுரி மாவட்டத்திலிருந்து நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்துக் கட்டியது. அதன் பின்னர் எப்போதாவது நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் மீண்டும் நக்சலைட் வேட்டை தீவிரமாக நடந்தது. ஏராளமானோர் இதில் சிக்கினர். இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீசாரின் தொடர் கெடுபிடியால், அதிருப்தி அடைந்த நக்சலைட்டுகள் பழிக்கு வாங்க, இச்செயலை அரங்கேற்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேசமயம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மீண்டும் வெளிமாநில நக்சலைட்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

2002ல் சாமல்பட்டி அடுத்த ஜோகிப்பட்டியில், அடர்ந்த மலையடிவாரத்தில் மாந்தோப்பில் நக்சலைட்டுகள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்தனர். அப்போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். நக்சலைட்டுகள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன்பின், நக்சலைட்டுகள் தேனி மாவட்டத்தில் உள்ள மலையடிவாரத்தில் பதுங்கினர். அங்கும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இன்னொரு தர்மபுரியாக தேனி மாறி விடாமல் தடுக்க அதிரடியான நடவடிக்கைளில் தமிழக போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேனியை புதிய முகாமாக மாற்றும் நக்சலைட்டுகளின் முயற்சிக்கு தோல்வி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவேதான் தங்களது பலத்தைக் காட்ட ரயிலைத் தகர்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டு பாட்னா எக்ஸ்பிரஸுக்கு குறி வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X