முட்டுக்காடு சாலை விபத்தில் கவுன்சிலர் உள்பட 5 பேர் பலி
சென்னை: சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த சாலை விபத்தில் சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் பலியானார்கள்.
சென்னை ராயபுரம் பகுதி திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் (43). இவர் சென்னை மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவர் நேற்று தனது நண்பர்கள் முருகன், இளவழகன், செந்தில் ஆகியோருடன் மாமல்லபுரத்திற்கு சென்றார். காரை மகேஷ் என்பவர் ஓட்டினார்.
மாமல்லபுரத்தில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முட்டுக்காடு அருகே கார் வந்தபோது, திடீரென நிலை தடுமாறி ஓடியது. பின்னர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துடன் மோதியது.
மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. கவுன்சிலர் ஸ்ரீதர் தூக்கி வீசப்பட்டு பலியானார். அவர் தவிர இளவழகன், செந்தில், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முருகன் படுகாயமடைந்த நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.