கர்நாடகத்திற்கு எதிராக ஓசூர் கன்னடர்கள்!
தமிழகத்திலேயே கன்னட இனத்தவர் அதிக அளவில் வசிப்பது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில்தான். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 சதவீத கன்னடியர்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பல பள்ளிகளில் கன்னடம் 2வது மொழிப் பாடமாகவும் உள்ளது.
இந்த நிலையில் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகவில் நடந்து வரும் போராட்டங்கள் இங்குள்ள கன்னடர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.
இந்தக் குடிநீர்த் திட்டத்தால் இரு மாவட்டங்களிலும் உள்ள கன்னட மக்களும்தான் பயன்பெறப் போகிறார்கள். பிறகு எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்று அவர்கள் கோபமாக கேட்கிறார்கள்.
இதுகுறித்து ஓசூர் நகராட்சி கவுன்சிலராக உள்ள கன்னடரான வேணுகோபால் கூறுகையில், இரு மாவட்டங்களிலும் கன்னட மக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அப்படி இருக்கையில் எதற்காக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
இன்னொரு கன்னட கவுன்சிலரான குமார் கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் இங்குள்ள கன்னடர்களுக்குத்தான் பெரும் பலன் கிடைக்கும். எனவே இந்தத் திட்டத்தை எதிர்ப்பது முட்டாள்தனமானது என்றார்.
கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து ஓசூரில் உள்ள கன்னடர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் இங்குள்ள கன்னடர்கள் முடிவு செய்துள்ளனராம்.