சேலம்-மைசூர் பஸ்கள் நிறுத்தம்

ஓகேனக்கலை உரிமை கொண்டாடியும், ஓகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்தும் கர்நாடகத்தில் சில கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியுள்ளனர். இதனால் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிளில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
கன்னட அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக தமிழகத்திலும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. மதுரையில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி ஊழியரை சிறைப் பிடித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் கன்னட அமைப்பினர் தமிழர்கள் மீதும், தமிழக அரசுப் பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து சேலத்திலிருந்து மைசூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. மாலே மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே அவை இயக்கப்படுகின்றன.
எனவே இன்று காலை முதல் சேலத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. அந்த பஸ்கள் மாதேஸ்வரன் மலை வரை சென்று திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் பஸ்கள் வழக்கம் போல செல்கின்றன. இருப்பினும் இவற்றை இரவு நேரத்தில் இயக்காமல் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
எடியூரப்பா கொடும்பாவி எரிப்பு:
இந்த நிலையில், தமிழக மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சேலத்தில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications