தமிழகத்தில் போராட்டம் வலுக்கிறது
சென்னை: தமிழகம் முழுவதும் கர்நாடகத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதுவரை நடந்திராத அளவுக்கு கோபாவேசத்துடன் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள், வக்கீல்கள், சட்ட மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
சேலம், குகை நரசிங்கபுரத்தில் கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடக பட்டு விற்பனை வாரியம் உள்ளது. இங்கு பெரியார் திராவிட கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் திரளாக வந்தனர்.
பட்டு விற்பனை வாரியத்தின் ஜன்னல் கதவுகளை அடித்து உடைத்தனர். போர்டும் அடித்து நொறுக்கப்பட்டது. பெங்களூர், எங்களூர் என்று கோஷமிட்டபடியும், ஓகனேக்கலை உரிமை கொண்டாடாதே என்று கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர்.
இதேபோல சேலத்தில் மனித உரிமை இயக்கத்தினர் முன்னாள் முதலவர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோரின் கொடும்பாவிகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு மைசூரிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மைசூர் பஸ் வந்தது. அதை சிறை பிடித்து, அதில் இருந்த கன்னட எழுத்துக்களில் தார் பூசி அழித்தனர். பின்னர் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, திருமா வாழ்க என்று எழுதினர்.
பின்னர் பஸ்சை நகர விடாமல் தொடர்ந்து கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னர் பஸ் புறப்பட்டுச் சென்றது.
நெல்லையில் எடியூரப்பா கொடும்பாவி எரி்ப்பு:
நெல்லையில் எடியூரப்பா கொடும்பாவியை எரித்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கூடிய திமுகவினர் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக முதலில் பிரச்சனையை ஆரம்பித்து வைத்த கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இது தொடர்பாக 20 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.